இதுவரை உணராத உணர்வு
இதுவரை
அனுபவித்திராத புது வகையான உணர்வுடன் கால் நூற்றாண்டு காலத்திற்கு பிறகு பல வித
கனவுகளுடன் இன்று நான்
அவளை தேடி நாங்கள்
முதன் முதலில் சந்தித்த இடத்திற்கு சென்று கொண்டுருக்கிறேன், பசுமையான அந்த நினைவுகளை என் மனதில் நான் சுமந்து கொண்டும்
பேருந்து என்னை சுமந்து கொண்டும், என் நினைவுகளும் பேருந்தும் ஒருசேர பயணித்து கொண்டிருந்தது.
….. !! இன்று நடந்த சில சம்பவங்களை பற்றிய சிந்தனைகளோடு பேருந்தின் படிக்கட்டுகளில்
நின்று நான் பயணித்து கொண்டிருந்தேன், நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை
பேருந்து நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த நிறுத்தத்தில் அவள் யாருக்காகவோ காத்துக்
கொண்டிருந்தாள்.
பேருந்திலிருந்து இறங்கியவுடன் அவளை நான் பார்க்கும் போது அவள் என்னை பார்த்துக் கொண்டிருந்தாள், முதன்முறை எங்கள்
நான்கு கண்களும் ஒன்று சேர்ந்தது.
அந்த வழித்தடத்தில் அன்று
முதல் பயணம் செய்யத் துவங்கினேன். எனக்கும் அந்தப் பேருந்து
வழித்தடத்திற்கும் எந்தவித ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருந்தபோதும், நான் அவளை காண அங்கு செல்வது வழக்கமானது.
சில நேரம் எனக்கே புரியாது, நான் ஏன் தினமும்
என் இல்லத்திலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பின் குறைந்தது அவளுக்காக 30 முதல் 60 நிமிடம் வரை காத்திருந்து பின் 90 நிமிடங்கள் அவளுடன் பேருந்தில் பயணிக்க வேண்டுமென்று.
ஆனால் அவளுடன் பயணிக்கும் அந்த 90 நிமிடங்களை நான் வெறுத்ததுமில்லை தவறவிட நினைத்ததுமில்லை. அது எப்போதும் எனக்கு ஒரு புதுவித உணர்வாகவே இருந்தது.
அந்த 90 நிமிடத்தில் அவளை நானும் என்னை அவளும் எத்தனை முறை
பார்த்துக் கொள்வோம் என்று தெரியாது, ஆனால்
எங்களது நான்கு கண்களும் குறைந்தது நான்கு
முறையாவது ஒன்று கலக்கும். அதிகபட்சமாக 10 வினாடி வரை நீடிக்கும் அந்த ஒன்று கலப்பு என்னை எங்கோ
அழைத்துச் செல்லும்.
அந்தப் பத்து வினாடி அனுபவத்திற்காகவே
நான் தினமும் அத்தனை தூரம் அவளைக் காண பயணிப்பேன்.
அந்தப் பத்து வினாடிகள் என்பது வெறும் பத்து வினாடிகள் அல்ல அது என் வாழ்வில்
என்னை
சுய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த
காலம் என்றுதான் சொல்ல வேண்டும், ஆம்
என்னுள் அத்தனை கட்டுப்பாடுகள் இருந்தது அந்த பத்து வினாடிகளுக்காக.
அந்தப் பத்து வினாடி காக நான் தினமும் என் வீட்டிலிருந்து சுமார் ஒரு மணி
நேரம் பயணித்து அவளுக்காக 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை காத்திருந்து பின் அவர்களோடு 90 நிமிடங்கள் வரை பேருந்தில் பயணித்து மீண்டும் என்
வீட்டிற்கு நான் 90 நிமிடங்கள் வரை பயணம் செய்து திரும்புவேன்
அந்தப் பத்து வினாடிக்காக நான் அவளுக்காக காத்திருக்கும் அந்த 30 நிமிடங்களில் என்னுள் தோன்றும் கனவுகளுக்கு அளவே இல்லை.
இரண்டு ஆண்டுகள் வரை
இந்த சந்திப்பு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தது.
நான் வேலையில் சேர்ந்த உடன் என்னால் தினமும் அங்கு சென்று அவளை காண
முடியவில்லை குறைந்தது வாரத்திற்கு இரண்டு நாட்களாவது நான் அங்கு சென்று வருவேன், அந்த நேரங்களில் அவளைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருந்தது.
நான் வேலை சேர்ந்து
இரண்டு ஆண்டுகள் வரை அங்கு சென்று வந்தேன், அதன்
பின் என்னால் சரியான நேரத்தை அங்கு சென்று அவளை காண முடியவில்லை.
அந்த ஆறு ஆண்டு காலங்களில் முதல் ஈராண்டு காலம் வசந்த காலமாக துவங்கி அடுத்த
இரண்டு ஆண்டு காலம் இலையுதிர் காலமாக கடந்து, கடைசி
இரண்டு ஆண்டுகள் வறண்ட பாலைவனமாக முடிந்தது.
கடந்த ஆறு ஆண்டுகால நிகழ்வுகளுக்குக் மூலகாரணமாக இருந்தது ஐந்து காசுகள்
மட்டுமே. என் வாழ்வினை இந்த ஆறு ஆண்டு காலம்
பதப்படுத்தியதா, பக்குவப்படுத்தியதாஅல்ல
என்னை நிலைப்படுத்தியதா என்று எனக்கு
தெரியவில்லை, ஆனால் அந்த
மாற்றத்திற்கு காரணம் அந்த ஐந்து காசுகள் மட்டுமே ஆம், ஐந்து காசுகள் மட்டுமே.
கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதி முடித்துவிட்டு தேர்வு முடிவுகளுக்காக
காத்திருந்த காலங்களில் வாரம் ஒருமுறை நானும் என் நண்பனும் சந்தித்து திரைப்படம்
பார்ப்பது வழக்கமாக இருந்தது அப்படி ஒரு நாள் நாங்கள் திரைப்படம் பார்க்க
சென்றோம்.
அங்கு சென்றவுடன் எங்களிடம் இருந்த
அனைத்து நாணயங்களையும் எடுத்து எண்ணிப்
பார்க்கையில் 10 ரூபாய்க்கு 5 காசுகள் குறைவாக இருந்தது, திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டு ஒன்று ஐந்து ரூபாய் ஆகும் எங்கள்
இருவருக்கும் சேர்த்து மொத்தம் பத்து ரூபாய் தேவை ஆனால் எங்களிடம் ஒன்பது ரூபாய் 95 காசுகள் மட்டுமே இருந்தது.
என் நண்பன் எவ்வளவோ என்னை கட்டாயப்படுத்தி நுழைவுச் சீட்டு வாங்கலாம் என்று
கூறினான், ஆனால் நான் திடமாக மறுத்து விட்டு திரைப்படம் காணாமல் திரும்பி
விட்டோம்.
அடுத்து என்ன செய்வது என்று
யோசித்துக் கொண்டிருந்தோம், அப்போது அவன் வீட்டுக்கு செல்லலாம் என்று
நாங்கள் முடிவு எடுத்து, என் நண்பன் வீட்டிற்கு சென்றோம்.
அங்கு உணவருந்தி விட்டு பின்னர் நான் வீடு திரும்புவதற்காக பேருந்தில் பயணம்
செய்து கொண்டிருந்தேன், அன்று நான் கண்ட அந்த காட்சிதான்,
என் அடுத்த ஆறு ஆண்ட காலத்தை நடத்திச் சென்றது.
……..!!! இதோ நான் இறங்க வேண்டிய பேருந்து
நிறுத்தம் வந்து விட்டது, நான் அன்று போல் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு பேருந்து நிறுத்தத்தை
என் கண்களால் அவளை தேடுகின்றேன் அவளைக் காணவில்லை என்னுள் ஒரு மௌனம், என் கண்களை நான்
10 வினாடிகள் மெதுவாக மூடி திறக்கின்றேன் நான் கண்கள் மூடி இருக்கும் வரை என் கண்ணில்
அவள் பிம்பம் தெரிந்தது, நான் கண்களை திறந்த உடன் அந்த பிம்பம் என்னிடம் இருந்து மறைந்தது...!!!!
என் வாழ்வின் வசந்த காலமாக நான்
கருதுவது நான் காத்திருந்த காலங்கள் மட்டுமே. காத்திருப்பது என்பது என்றும் எனக்கு
மன சுமையாக இருந்தது இல்லை, நான் காத்திருக்கும் நேரம் மட்டுமே நான் நானாக இருப்பேன்,
மற்ற நேரங்கள் என்னுடைய நேரங்களாக இருக்காது இன்று வரை வாழ்வில் நான் காத்துக் கொண்டே
தான் இருக்கின்றேன், எதற்காக என்று எனக்கே புரியவில்லை காத்திருப்பேன், காத்திருப்பது
சுகமே...!!!!!